vaiko and thirumavalavan
வைகோவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல் பின்னணிகள் எதுவாக இருந்தாலும் அது திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்பதே கேள்வி!
விடுதலை சிறுத்தைகளின் வன்னியரசு திராவிட கட்சிகள் தலித்துகள் முன்னேற்றதுக்கு என்ன செய்தன என்று கேள்வி எழுப்பினால் அதற்கு வைகோவுக்கு மட்டும் கோபம வருவதில் பொருள் இல்லை.
அது திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் இடப்பட்ட கேள்வியாகவே பார்க்க வேண்டுமே அல்லாமல் அது வைகோவை நோக்கி வீசப் பட்ட கேள்வியாக கொள்ளக்கூடாது.
அதற்கு வைகோ கொஞ்சம் அதிகமாகவே பதில் கொடுத்து விட்டார். வன்னியரசுவின் கேள்வி தன்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஆகவே எடுத்துக் கொண்டு பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
தலித் ஒருவரை தன் உதவியாளராக வைத்திருப்பதை ஒரு சாதனை ஆக வைகோ பார்க்க அதை சாதி ஆணவமாக வன்னியரசு பார்த்தார்.
பிறகு திருமாவளவன் தலையீட்டில் வன்னியரசு தன் பதிவை நீக்கிய பிறகும் வைகோ ஏன் அதை பெரிதாக்கினார் என்பது புரியவில்லை.
எல்லாவற்றையும் விட தான் திருமாவளவனுக்கு ரூபாய் ஐம்பது லட்சம் தேர்தல் நிதியாக கொடுத்ததை வைகோ இப்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விக்கு விடை இல்லை.
விடுதலை சிறுத்தைகளை அவமானப்படுத்திய இந்த செயல் இப்போதைக்கு இருவரையும் சமாதனப்படுத்தும் என்று தோன்றவில்லை.
வைகோவை திமுக அணியில் இருந்து வெளியேற்ற தீட்டப்பட்ட சதியின் வெளிப்பாடு இது என்றால் இதில் பலி ஆனவர் யார்.?
வன்னியரசு பதிவின் கீழே யார் இருந்தார் என்ற வைகோவின் கேள்விக்கு என்ன பொருள்? திருமா தூண்டித்தான் வன்னியரசு இந்த பதிவை ஏற்றினார் என்று பொருள் ஆகிறது. இனி எப்படி இருவரும் ஓரணியில் இருந்து தேர்தலை எதிர் கொள்ள முடியும்?
இடையில் இந்த மோதலுக்கு முதல்வர் எடப்பாடி பழநிசாமியும் அமைச்சர் வேலுமணியும்தான் காரணம் என்று செய்திகள் வருகின்றன. அதாவது திமுக கூட்டணியை உடைத்து அதன் ஒரு பகுதியை தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சி. அதில் பலியானவர் யார் எனது இனிதான் தெரியும்.
வைகோவின் கடந்த கால வரலாறு அவர் எதற்கும் தயாரானவர் என்பதுதான்.
நிலையில்லா நிலைப்பாடுகளின் முதல்வர் அவர். உணர்ச்சி மிக்கவர் அல்லது உணர்ச்சிகளை பயன்படுத்துபவர்.
இப்படி ஒரு நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி எந்த கூட்டணி தான் நிம்மதியாக போராட முடியும்?
வைகோ தன் வாதத் திறமையை தன் கூட்டணி கட்சிகளிடம் காட்டாமல் இருந்தால் போதும்.
மொத்தத்தில், மத்தியில் மத வாத மோடி அரசை வீழ்த்துவதற்கும் தமிழ்நாட்டில் எடப்பாடியின் ஊழல் அரசை வீழ்த்துவதற்கும் உறுதுணையாக இல்லாமல் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்கும் வேலைகளில் யார் ஈடு பட்டாலும் அவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
This website uses cookies.